பாஜ அமைச்சர் செயலால் பரபரப்பு; மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு ‘பளார்’

சாம்ராஜ்நகர்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் மனு கொடுக்க வந்த பெண்ணை பாஜ அமைச்சர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அப்பெண் அமைச்சரின் காலில் விழுந்து கோரிக்கை மனுவை வழங்கினார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பொம்மை தலைமையிலான பாஜ ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் வி.சோமண்ணா. இவர் சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் குண்டலுபேட்டைக்கு நேற்று சென்றார். அப்போது விவசாயிகள் பிரச்னையை தீர்க்காத அமைச்சர் மாவட்டத்தை விட்டு திரும்பி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அமைச்சர் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நிலப்பட்டா கோரி பலர் மனுக்களை அமைச்சரிடம் கொடுத்தனர். இதில் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த கெம்பம்மா என்ற பெண் நிலப்பட்டா நீண்ட நாட்களாக கிடைக்கவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து விரைவில் நிலப்பட்டா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் அருகில் சென்று கேட்டார். இதில் கோபமடைந்த அமைச்சர் சோமண்ணா அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். அதை பெரிதாக பொருட்படுத்தாத அப்பெண் அமைச்சரின் கால்களில் விழுந்து மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கை தெரிவிக்க வந்த பெண்ணை அமைச்சர் அறைந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.