மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு இந்திய கடற்படை மீது 4 பிரிவில் வழக்கு பதிவு

வேதாரண்யம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரியை சேர்ந்த காசிராஜன் மகன் வீரவேல்(32). மீனவரான இவர், கடந்த 18ம்தேதி சக மீனவர்கள் 9 பேருடன் விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். கடந்த 20ம் தேதி இரவு, மீனவர்கள் 10 பேரும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே இலங்கை கடல் எல்லை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படையினர் விசைப்படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் வீரவேல் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக இந்திய கடற்படை மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற 9 மீனவர்கள் மற்றும் இவர்களது படகு வேதாரண்யம் கடலோர காவல்படையில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து 9 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.