சென்னை :வங்கக் கடலில் உருவான, ‘சிட்ரங்’ புயல், வங்க தேசத்தை நெருங்கி விட்டதால், தமிழகம், புதுச்சேரியில், மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம். சென்னையில் இன்று லேசான மேகமூட்டம் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்று முதல் 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். நேற்று காலை, ௮:௩௦ மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக சிவகிரியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் உருவான, ‘சிட்ரங்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசத்தில் இன்று அதிகாலை டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்கிறது. புயல் காரணமாக, வங்கக் கடலின் வடக்கு பகுதி, வங்க தேச கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement