கலை இயக்குநர்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' – மரணமடைந்தார் சந்தானம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள பகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக சோழர்கள் வாழும் இடமான அந்த மலை குகை, பாண்டியர்கள் வணங்கும் தெய்வம் என கலை இயக்கம் படு நேர்த்தியாக இருந்தது. அந்தப் படத்தில் மட்டும் தத்ரூபமாக மொத்தம் 18 செட்டுகள் போடப்பட்டன. அத்தனை செட்டுகளையும் வடிவமைத்தவர் கலை இயக்குநர் டி.சந்தானம். அதிலிருந்து அவர் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கலை இயக்குநராக மாறினார்.

இதனையடுத்து இந்திய அளவில் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸின் ஆஸ்தான கலை இயக்குநர்களில் ஒருவராகவும் வலம் வந்தார். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த விஜய் நடிப்பில் சர்கார், ரஜினி நடிப்பில் தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு கலை இயக்கத்தை சிறப்பாக செய்து முடித்தார். தற்போது கௌதம் கார்த்தியை வைத்து முருகதாஸ் 1947 என்ற படத்தை இயக்குகிறார். அதற்கும் சந்தானமே கலை இயக்குநர் ஆவார்.

மேற்கூறிய படங்கள் மட்டுமின்றி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தெய்வ திருமகள், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமாண்ட்டி காலனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி முத்திரை பதித்திருக்கிறார்.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டி.சந்தானம் மரணம் அடைந்து விட்டதாக, தகவல்கள் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.