நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் 1997 முதல் 2021 வரையை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் என்ற முறையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை “அரசியல் என்பது ஓர் ஆரோக்கியமான களம். இந்த ஆரோக்கியத்தை இளைஞர்களால் மட்டுமே கடைப்பிடிக்க முடியும். இளைஞர்கள் அரசியலுக்கு அதிகமாக வர வேண்டும். அரசியலை இளைஞர்கள் யாரும் ஒதுக்க வேண்டாம். உங்களால் முடியாவிட்டால் உங்கள் பகுதியில் உள்ள நல்லவரை பஞ்சாயத்து தலைவராக முன்னிறுத்தி அவர் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முயற்சி செய்யுங்கள்.
தமிழகத்தில் ஒட்டுமொத்த சிஸ்டமும் கெட்டுவிட்டது. இதனை உடனடியாக சரி செய்ய முடியாது என்பதுதான் உண்மை. ஒவ்வொரு பகுதியாக அவரவர் கடமைகளை உணர்ந்து உரிய சமூகப் பணிகளை ஆற்ற வேண்டும். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது நல்ல விஷயம். இதனை அடிக்கடி நடத்த வேண்டும்” என பேசினார்.