தீபாவளி பண்டிகை: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் உண்டு தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குழித்து புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான். பொதுமக்கள் காலை முதலே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் செய்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கியும் தீபாவளி பண்டிகைகயை சாதி, மதம் பாராமல் ஒற்றுமையுடன் தமிழ்நாடு மக்கள் வழக்கம் போல் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில், 6700 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய வார்டுகளில் கூடுதல் படுக்கைகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.