பரிமள ரங்கநாதர் கோயில், திருஇந்தளூர்

யிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் பரிமள ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது.

வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.

அம்பரீஷன் என்ற மன்னன் தன்னுடைய 100வது ஏகாதசி விரதத்தை இத்தலத்தில் முடிக்க விரும்பினான். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் தேவர்கள் இவன் 100வது விரதத்தை முடித்தால் தேவலோக பதவி பெற்று விடுவான் என்று பயந்து துர்வாசரிடம் முறையிட அவரும் விரதத்தை தடுத்துவிடுவதாக கூறி இங்கு வருகிறார். ஆனால் மன்னன் ஏகாதசி விரதத்தை முடித்து விடுகிறான்.

ஏகாதசி விரதம் முடித்து விட்டாலும் துவாதசி நேரத்துக்குள் உணவருந்தினதால்தான் முழு பயன் கிடைக்கும். துவாதசி நேரம் துவங்கியதும் மன்னன் உணவருந்த தயார் ஆனான். அப்போது அங்கு வந்த துர்வாசரை அவரது உள்நோக்கம் அறியாமல் அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான்.

அவரும் நதியில் நீராடி வந்து விடுகிறேன், பின்பு உணவருந்தலாம் என்று கூறி நீராட செல்கிறார். தாமதமாக சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்று நினைத்து தாமதம் செய்கிறான். மன்னன் தான் மட்டும் விரதம் முடித்தால் சாபம் இடுவார் என்று கலங்கி வேதியர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆலோசனை படி பெருமாளை வேண்டி உள்ளங்கையில் முழு அளவு தீர்த்தம் மூன்று முறை அருந்தி விரதத்தை முடித்தான்.. இதை உணர்ந்த துர்வாசர் கோபம் அடைந்து ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல ஆணையிட்டார். மன்னன் இறைவன் திருவடியில் சரணடைய பூதத்தை பெருமாள் விரட்டினார். மன்னிப்பு கேட்ட துர்வாசரை மன்னித்தார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள் புரிகிறார். ஏகாதசி விரதம் இருக்க சிறந்த தலம்.

இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோயில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக் கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.