பல்கலை. துணைவேந்தர் பதவி விற்பனை? – குற்றச்சாட்டை ஆளுநர் நிரூபிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பல கோடிக்கு விற்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைக்கும் தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அதை நிரூபிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.50 கோடி வரை விற்கப்பட்டதாக தற்போதைய பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்துள்ளார். பஞ்சாப் ஆளுநரின் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளை ஆளுநர்கள்தான் நிரப்புகின்றனர். அவ்வாறு இருக்கும்போது முன்னாள் ஆளுநரே துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறுவது வேதனையாக உள்ளது. துணைவேந்தர் பதவிகள் விற்கப்படும்போது அமைதியாக இருந்துவிட்டு, தற்போது குற்றம்சாட்டுவது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கிறது.

இந்த விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பதை முன்னாள் ஆளுநர் புரோஹித் நிரூபிக்க வேண்டும்.மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து, உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தர் பதவிகளை நிரப்பும் ஆளுநரே குற்றச்சாட்டை முன்வைப்பது தன் மீதா அல்லது வேறு யார் மீதாவதா என்பதை ஆதாரத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.