பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாட கார்கில் சென்றார் பிரதமர் மோடி…!

லடாக்,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார்.

2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடுகிறார். இதற்காக பிரதமர் மோடி கார்கில் சென்றுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.