தனியார் நிறுவன கணக்கில் செலுத்தப்படும் குடிநீர், சொத்து வரி… வழக்கில் பகீர் தகவல்!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெத்துரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள், பேரூராட்சிகளில் குடிநீர் வரி, சொத்துவரி, மற்றும் பல வரிகள் வசூல் செய்யப்படுகின்றன. இவ்வாறு கிராமங்கள், பேரூராட்சிகளில் வசூல் செய்யப்படும் தொகை தமிழக அரசின் மூலம் தணிக்கை செய்யப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள பல கிராமங்கள், பேரூராட்சிகளில் குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்ய சாப்ட்வேர் உள்ளது. இந்த சாப்ட்வேர் மூலம் வரி வசூல் செய்யப்படும் தொகை அந்தந்த கிராமம் மற்றும் பேரூராட்சிகளின் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவதில்லை. தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

மேலும் அந்த நிறுவன நிர்வாகமே கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளின் வரிகளை வசூல் செய்கின்றது. ஆனால் இதற்கான எந்த அரசாணை இதுவரை இல்லை. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் வரி வசூல் செய்யும் தொகை சரியாக அந்தந்த கிராம வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறதா? என்ற விபரம் முறையாக‌ தெரிவிக்கப்படவில்லை.

எனவே, கிராமங்கள், பேரூராட்சிகளில் சாப்ட்வேர் மூலம் வரிகளை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்து முறைப்படுத்த வேண்டும். அந்தந்த கிராமங்கள், பேரூராட்சிகளில் வசூல் செய்யப்படும் தொகை அந்தந்த கிராம வங்கிகளில் செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்று பெத்துரன் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் “ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு மிக முக்கியமான ஒன்று. எனவே வழக்கு குறித்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வளங்கள் துறை செயலர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.