களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூங்கிலடி வெப்பலை சேர்ந்தவர் ரமேஷ் பாலன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாலரேவதி (38). இவர்களது மகன்கள் ஸ்ரீதரன் (12) 7ம் வகுப்பும், ரிஷிதரன் (11) 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் பாலரேவதி கணவர் ரமேஷ்பாலனுடன் செல்போனில் பேசினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்தவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை திறந்து அறை முழுவதும் பரவ செய்துள்ளார். பின்னர் சிலிண்டருக்கு தீ வைத்தார். இதில் அவர் மீதும், தூங்கிக் கொண்டிருந்த மகன்கள் மீதும் தீ பற்றியது. வலி தாங்காமல் அலறி துடித்தனர். தகவலறிந்து நாங்குநேரி தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். படுகாயமடைந்த பாலரேவதி, ஸ்ரீதரன், ரிஷிதரன் ஆகியோருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
