தெலங்கானா அரசியலில் பரபரப்பு டிஆர்எஸ் கட்சியில் சேரும் பாஜ முக்கிய தலைவர்கள்: முன்னாள் எம்பி.யும் விலகி அதிரடி

திருமலை: தெலங்கானாவில் பாஜ.வில் இருந்து விலகி ஆளும் டிஆர்எஸ் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்களால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தெலங்கானா மாநிலத்தில், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வழக்கமாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முன்னாள், இன்னாள் எம்பி, எம்எல்ஏ,க்களை இழுத்து பாஜதான் அதிரடி செய்யும். ஆனால், தெலங்கானாவில் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதிகளவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு ஓடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பாஜவை சேர்ந்த பிக்ஷமய்யா கவுட், தசோஜூஷ்ரவன், சுவாமி கவுட் ஆகிய முக்கிய தலைவர்கள் டிஆர்எஸ்.சில் இணைந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்னாள் மாநிலங்களவை எம்பியான ராபோலு ஆனந்த பாஸ்கர் பாஜ.வில் இருந்து விலகினார். இவர் காங்கிரசில் இருந்தபோது 2012 – 2018 வரை மாநிலங்களவை எம்பி.யாக இருந்தார். இவர் கடந்த 23ம் தேதி, டிஆர்எஸ் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர் ராவை சந்தித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று பாஜ. உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து, மேலும் பல பாஜ தலைவர்கள் டிஆர்எஸ்.சில் இணைய உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இதனால், தெலங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.