நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை… சிவகங்கை CEO முக்கிய அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் வாழ்ந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை விழா நாளை (அக்டோபர் 27) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியநாதன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் கருணாஸ், ஸ்ரீதர்வாண்டையார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இவர்கள் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய 5 சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வழியாக வரும் வாகனங்கள் மோட்டார் வாகன அலுவலர்களின் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வெளியூர் வாகனங்கள் வந்து செல்வதற்கு தனி, தனி வழித்தடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வெளிப்புறங்களில் தொங்கியபடி வருபவர்கள், மேற்கூரை மீது அமர்ந்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மருது பாண்டியர்கள் குருபூஜையை ஒட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதவிர சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிஐஜி மணிவண்ணன், மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் தலைமையில், 3 எஸ்.பி.,க்கள், ஏ.எஸ்.பி 7 பேர், டி.எஸ்.பி 13 பேர், காவல் ஆய்வாளர்கள் 50 பேர், சார்பு ஆய்வாளர்கள் 216 பேர் உட்பட 2,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 35 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 42 இருசக்கர ரோந்து வாகனங்களும் சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.