பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் 1,037 வது சதய விழா: பந்தக்கால் நடப்பட்டது

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி, பெரிய கோயிலில் நேற்று, காலை பந்தக்கால் நடப்பட்டது. முன்னதாக பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சதய விழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா நடைபெறும். நவ.3ம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதி உலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கும். இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலா நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.