T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்த இரு அணிகளுக்கிடையில் நேற்று (26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இங்கிலாந்து இன்னிங்சின் போது மழைக் குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் விதிப்படி இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 111 ஓட்டங்களைஎடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து வீரர்கள் வெற்றிக்காக போராடிய போதும் அந்த அணியால் 14.3 ஓவர்களில் 105/5 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
சூப்பர்12 சுற்றில் நேற்று நடைபெற இருந்த 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயர்லாந்து அணியின் ஆச்சரிய வெற்றி, மற்றும் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து போன்றவற்றால் உலகக் கிண்ண புள்ளிபட்டியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 1 வெற்றி மற்றும் 1 முடிவு இல்லாத போட்டியின் காரணத்தால் 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
ஒரு வெற்றி ஒரு தோல்வி என இந்த பட்டியலில் இலங்கை அணி 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் அயர்லாந்து அணி 4-வது இடத்திலும், அவுஸ்திரேலியா அணி 5-வது இடத்திலும் உள்ளது. 1 புள்ளியுடன் இந்த குரூப் 1 புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
இரண்டு குரூப்களிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே ஒரு தோல்வியை சந்தித்து விட்டன. இதனால் நாளை நடைபெற இருக்கும் இங்கிலாந்து- மற்றும்
அவுஸ்திரேலிய இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமாக அமையும்.