திருமங்கலம்: காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய இன்ஜினியர் திருமணத்தை ஆசிரியை தடுத்து நிறுத்தியதால், திருமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் நாகபிரியா (30). பிசிஏ முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சின்னசாமி (32). சாப்ட்வேர் இன்ஜினியர்.
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். உறவினர்களான சின்னசாமிக்கும், நாகபிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நெருங்கி பழகியதால் தற்போது நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சின்னசாமிக்கும், விருதுநகரைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்தனர். திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த, நாகபிரியா தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார், தி நாகபிரியா, சின்னசாமி, அவரது பெற்றோரை திருமங்கலம் மகளிர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை குடும்பத்தார் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். அதே நேரம் சின்னசாமி, காதலி நாகபிரியாவை ஏற்றுக் கொள்வதாக கூறினார். இருப்பினும் இது தொடர்பாக திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளும்படி, மகளிர் போலீசார், நாகபிரியா, சின்னசாமி குடும்பத்தாரை அனுப்பி வைத்தனர்.