பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் பொறியியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பதால் இந்தக் கல்லூரிகளில் படிப்பதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணடம், திட்டக்குடி, தொழுதூர், மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் தினந்தோறும் பெரம்பலூர் பகுதிக்குச் சென்று படித்து வருகின்றனர். இவர்களைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்காக கல்லூரி பேருந்துகள் ஏராளம் வந்து செல்கின்றன.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் கல்லூரி செல்வதற்கு கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்ற மாணவர்கள் இரு அணியாக மாறி மோதிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்டையை நிறுத்தி அவர்களிடையே விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இரண்டு பேர் காதலித்துள்ளனர். இதனால், இவர்களுக்குள் காதலியை கரம் பிடிப்பது நீயா? நானா? என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரண்டு தரப்பு மாணவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.