தசை அழற்சி நோயால் பாதிப்பு : மீண்டு வருவேன் என சமந்தா உறுதி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்தார். அவருக்கு முன்பைப் போல தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

இந்நிலையில் இன்று ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே டப்பிங் பேசும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “யசோதா' டிரைலருக்கு உங்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. உங்களுடனான இந்த அன்பும், தொடர்பும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க இது எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு 'மயோசிட்டிஸ்' (தசை அழற்சி) என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது சரியான பிறகு உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட இதற்கு சற்று கால தாமதம் ஆகிறது. எப்போதுமே வலுவான முன்னிறுத்தலுடன் இருக்க வேண்டியதில்லை என்பதை நான் மெதுவாக உணர்கிறேன். இந்த பாதிப்புடன் போராடிக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நான் விரைவில் முழுவதுமாக குணமடைவேன் என டாக்டர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் மோசமான நாட்களும் இருந்ததுண்டு. இன்னும் ஒரு நாளைக் கூட சமாளிக்க முடியாத என நினைக்கும் போது அந்த நிமிடம் கூட எப்படியோ கடந்து செல்கிறது. இன்னும் ஒரு நாளில் குணமடைவதை நெருங்கிவிட்டேன் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். உங்களை நேசிக்கிறேன்,” என தன்னம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.

அவர் விரைவில் குணமடைய ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.