பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை இளைஞர்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு, உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல் , வேலைத்திட்டங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று (29) கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வறுமையிலிருந்து மீள்வதற்கு நாட்டின் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சகலரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி நிலவுவதனால் சில நாடுகள் உணவு பொருள் ஏற்றுமதியினை வரையறுத்துள்ளது. இலங்கையில் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள முடியும். உணவு பாதுகாப்புக்காக பிரதேச அபிவிருத்தி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.