செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நால்வர் கோவில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேணு (66). இவர் கொத்திமங்களம் பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தில் பயிர் செய்து வந்தார்.
அப்பகுதியில் பன்றிகள் வந்து பயிர்களை நாசம் செய்வதால் அதனை தடுப்பதற்காக வேணு வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் இரவு பெய்த கனமழையால் நெற்பயிகள் முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில் இருந்ததால், வேணு அதிகாலையே நீரை வெளியேற்ற வயலுக்கு சென்றார்.
அப்பொழுது வேணு மின்வேலி அருகே நடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வேணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.