செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில்,  செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 3மணி அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உபரிநீரை திறந்து வைத்தார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் புழல் ஏரியில் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்  புழல் நீர் தேக்த்திற்கு நீர்வரத்தானது  வினாடிக்கு 2000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதன் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 2692 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த உயரமான 21.20 அடியில் தற்போது 18.42 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி உபநீர் வெளியேற்றும் மதகுகள் வழியே, முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி உபரிநீரானது மாலை 3 மணியளவில் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த வழித்தடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் தண்டல்கழனி, வடகரை, வட பெரும்பாக்கம், மணலி புதுநகர், சடையன் குப்பம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அதுபோல செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால்,   அடையார் ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.