புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் தமிழிசை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, பல்கலைக்கழக ஒப்புதலுடன் புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், தற்போது உள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை தேர்வு முறை அறிமுகப்படுத்த இருப்பது குறித்தும், புதுச்சேரியில் மருத்துவக் பல்கலைக் கழகம் துவங்குவதற்கான அனுமதி குறித்தும் விவாதித்தார்.
மேலும், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவை துவங்குவது குறித்தும் விவாதித்தார்.
இதுதொடர்பான கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் அளித்தார். கவர்னரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக,புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, கவர்னர் தமிழிசை டில்லியில் உள்ளதேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement