காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் நாளை முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 5-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என, டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதிக அளவில் மோசமடைந்து இருப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என டெல்லி அரசுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், மாசு நிலை சீராகும் வரை டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது “டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதற்காக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், 5-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசுபாடு வட இந்திய பிரச்சனை. ஆம் ஆத்மியோ, டெல்லி அரசோ அல்லது பஞ்சாப் அரசோ மட்டும் இதற்கு பொறுப்பல்ல” என்று தெரிவித்தார்.