இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு… பிரதமரை கைக்காட்டும் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி!

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் (70) தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதனால் கோபமடைந்த இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரில் ஆளுங்கட்சியை கண்டித்து, இம்ரான் கானின் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் இருந்த மர்ம நபர், இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது கால்களில் குண்டுபாய்ந்ததால் அவர் லாகூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் உடனே அனுமதிக்கப்பட்டார்.

இம்ரான் கானின் இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளது என்றும், ஆனால் அவரின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, இம்ரான் கான் ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில், இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ்ஷெரீப் இருப்பதாக தெஹ்ரீக்- இன்சாப் கட்சி பகிரங்மாக குற்றம்சாட்டி உள்ளது.

மருத்துவமனை சொன்ன தகவல்… இம்ரான் கான் ஆதரவாளர்கள் நிம்மதி!

இதுதொடர்பாக தெஹ்ரீக்- இன்சாப் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியும், இம்ரான்கானின் நண்பருமான ஆசாத்உமர் கூறும்போது, ‘இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்புலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ்ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் நம்புகிறார். அவருக்கு கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில்தான் இதனை அவர் எங்களிடம் கூறியுள்ளார்’ என்று உமர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இம்ரான் கான் மருத்துவமனையில் இருந்து இன்று வெளியிட்ட அறிக்கையில், “இறைவனின் அருளால் எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. வலிமையுடன் மீண்டும் போராடுவேன்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.