வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை, காரைக்காலில் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அதில், “கடந்த 24 மணி நேரத்தில் பரவலாகப் மழை பெய்திருக்கிறது. 12 இடங்களில் கனமழை பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 செ.மீ மழைப் பதிவாகியிருக்கிறது. தமிழகத்தில் நிலவிவந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து கேரளா பகுதிகளுக்கு மேல் நிலவுகிறது.

அடுத்த மூன்று தினங்களுக்குப் பரவலாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும்… திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போதைய வானிலை நிலவரப்படி, வரும் நவம்பர் 9-ம் தேதி இலங்கையை ஒட்டியிருக்கும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, வரும் நவம்பர் 10, 11-ம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையில் நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை மற்றும் நகர்வு குறித்துத் தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும்.

மீனவர்கள் வரும் நவம்பர் 8, 9-ம் தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரைக் கடந்த அக்டோபர் 01-ம் தேதி முதல் நவம்பர் 04-ம் தேதிவரை 210 மி.மீ மழைப் பதிவாகியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பு மழை 202 மி.மீ ஆகும். இது இயல்பைவிட நான்கு சதவிகிதம் அதிகம். அதேபோல, சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 31-ம் தேதிவரை, பதிவான மழையின் அளவு 413 மி.மீ. இது இயல்பை (325 மி.மீ) விட 25 சதவிகிதம் அதிகம்” என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.