35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‛நாயகன்' கூட்டணி: கமல்ஹாசன் – மணிரத்னம் படம் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்த ‛விக்ரம்' படம் அவரது சினிமா வரலாற்றிலேயே வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நாளை (நவ.,7) பிறந்தநாளை கொண்டாட உள்ள கமல்ஹாசனின் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.

மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன், துணிவு பட இயக்குனர் எச்.வினோத் ஆகியோரின் படங்களில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், மணிரத்னம் படம் குறித்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த கூட்டணி 35 ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் படத்தில் இணைந்திருந்தது. இது இன்றளவும் பேசப்பட்டு வரும் நிலையில், அதே கூட்டணி இணைய இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.