சட்டப்பேரவை தேர்தலில் ரொக்க செலவு வரம்பை ரூ.2,000 ஆக குறைக்கலாம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ரொக்க செலவு வரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக  குறைக்கும்படி ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நியாயமாக நடைபெறும் வகையில், ரூ.10 ஆயிரத்துக்கு மேலான  பரிவர்த்தனைகள்  காசோலை, வரைவோலை மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில்தான் நடைபெற வேண்டும் என்று  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர்கள் தனி வங்கி கணக்கை துவக்க வேண்டும். தினசரி  செலவு கணக்கு விபரங்களை வேட்பாளர்கள் வைத்திருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் இந்த கணக்கை மாவட்ட  தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் செலவின் வெளிப்படையான பரிவர்த்தனைக்காக  வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான ரொக்க பணம் வரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும். ரூ.2 ஆயிரத்துக்கும் மேலான பரிவர்த்தனைகள் காசோலை, வரைவோலை மற்றும் ஆன்லைன் முறையில் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தும்படி ஒன்றிய அரசுக்கு  தேர்தல் ஆணையம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.