மனுவில் முகாந்திரம் இல்லை – அண்ணாமலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் “பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர்” என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

பறையர் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அவரின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், சென்னை காவல் துறை ஆணையரிடம் அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவால் சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காசி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மனுவில் எந்தவித முகாந்திரம் இல்லை என கூறி, காசியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.