புதுச்சேரி: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத 60 ஆயிரம் பேரை நீக்க குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பொது வினியோக திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சேரும். தகுதியற்ற, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றது.
புதுச்சேரி மாநிலத்தில் 3.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள சூழ்நிலையில், இரண்டு மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியற்ற பயனாளிகளை மத்திய அரசு கண்டறிந்து புதுச்சேரி அரசுக்கு அனுப்பியுள்ளது.
இதில் புதுச்சேரியில் இருந்து 13,400 பேர் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தங்களது பெயர்களை ரேஷன் கார்டு களில் இடம் பெற செய்துள்ளது தெரிய வந்தது. புதுச்சேரியில் அதிகபட்சமாக 11,135 பேர் சிக்கியுள்ளனர். காரைக்காலில் -214, ஏனாம்-2041, மாகி-10 பேர் போலி பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியான ஆவணங்ளை சமர்பிக்காத இவர்களது பெயர்களை நீக்குவது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் துறை ஆய்வு செய்து வருகிறது.
இதேபோல் ரேஷன் கார்டுடன் 60 ஆயிரம் பேர் இன்னும் தங்களது ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். பலமுறை வாய்ப்பு கொடுத்தும் கூட அவர்கள் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் 14 லட்சம் பேருக்கு ஆதார் எண் எடுக்கப்பட்டுள்ளது. மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் எடுத்துள்ளனர். மாநிலத்தில் ஆதார் எடுக்கப்பட்டது 100 சதவீதமாக பதிவாகி உள்ளது.

அப்படி இருந்தும் கூட 60 ஆயிரம் பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளது புதிராக உள்ளது. இவர்கள் புதுச்சேரியில் வசிக்காமல், பிற மாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இவர்களை பற்றிய முகவரியை எடுத்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வருகிறது. இவர்கள் தானாக முன் வந்து ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அந்தந்த ரேஷன் கார்டுகளில் இருந்து அவர்களது பெயர் நீக்க குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனி நபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும். ரேஷன் வரம்புக்கு மேல் வருமானம் இருப்பதால், ரேஷனுக்குத் தகுதியற்ற நபர்களையும் அரசாங்கம் நிறுத்த முடியும்.
தகுதியான நபர்கள் மட்டுமே மானிய விலையில் அரிசி ஆகியவற்றைப் பெறுவதையும் உறுதி செய்ய முடியும் என்பதால், கள ஆய்வினை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.
ஆதார் இணைப்பு மையம்
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறையில் ஆதார் இணைப்பு மையம் இயங்கி வருகிறது. நேரடியாக துறை அலுவலகத்தினை தகுந்த ஆவணங்களுடன் அணுகி ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement