சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகக் கூடும். அதன் காரணமாக 11-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.9-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 8-ம் தேதி ஒருசில இடங்களிலும், 9, 10, 11-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
குறிப்பாக 11-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 9-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும்.
10-ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா,தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், 11-ம் தேதி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.