ஹேமந்த் சோரனுக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது அரசியல் ஆலோசகர் பங்கஜ் மிஸ்ரா, ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் ஆகியோருக்கு சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க குத்தகை வழங்கியதாக பாஜக இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையை தொடர்ந்து பங்கஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு, விசாரணைக் காவலில் இருந்து வருகிறார்.

இது தொடர்பாக ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரின் கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம். பொதுநல வழக்குகள் விசாராணைக்கு உகந்தவை அல்ல. இது தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பதிவில், வாய்மையே வெல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.