அண்ணாமலையை வரவேற்று பிளக்ஸ் வருங்கால ‘முதலைமைச்ரே’ வாடிப்பட்டியில் ‘கலகல’

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று அக்கட்சியினர், எழுத்துப்பிழையுடன் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு கிராம மக்களிடையே கலகலப்பை உண்டாக்கியது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி கிராமத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் வந்திருந்தார். அங்கு பாஜ உறுப்பினர் ஒருவர் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அண்ணாமலையை வரவேற்று, அப்பகுதியில் பாஜவினர் பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தனர். அதில் ஒரு பிளக்ஸ் போர்டில், வருங்கால ‘முதலைமைச்ரே’ என எழுத்துப்பிழையுடன் மிகப்பெரிய பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள், ‘என்னது முதலைக்கு அமைச்சரா’ என கிண்டல் அடித்தவுடன் பாஜவினர் அந்த பிளக்ஸ் போர்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த பிளக்ஸ் போர்டு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.