அபூர்வ நிகழ்வான முழு சந்திர கிரகணம்: மழை குறுக்கீட்டால் காண முடியாமல் மக்கள் ஏமாற்றம்

சென்னை: இந்தாண்டின் இறுதி சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. பருவமழை குறுக்கீடு காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தைக் காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனை முழுமையாக பூமி மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் எனவும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம்: அந்த வகையில் இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 16-ம் தேதி தென்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. இந்திய நேரப்படி மதியம் 2.39 முதல் மாலை 6.19 மணி வரை கிரகணம் தென்பட்டது. அதில் முழு சந்திர கிரகணம் 3.46 முதல் 5.11 மணி வரை காணப்பட்டது. அப்போது ‘பிளட் மூன்’ (ரத்த நிலா) எனப்படும் முழுமையான சிவப்பு நிறத்தில் சந்திரன் காட்சி அளித்தது.

இந்நிகழ்வை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் காணமுடிந்தது. அதேநேரம் இந்தியாவில் பகல் நேரம் என்பதால் பகுதி சந்திர கிரகணம் மட்டுமே தென்பட்டது. கொல்கத்தா, கவுகாத்தி உள்ளிட்ட சில இடங்களில் சந்திர உதயத்தின்போது கிரகணத்தின் இறுதி நிலைகளைக் கண்டுகளித்தனர்.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் கிரகணத்தைக் காண முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கிரகண இறுதி நிலைகளைக் காண முடிந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது:

பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு: தமிழகத்தில் பருவ மழையால் பல்வேறு பகுதிகளில் கிரகணத்தை தெளிவாகக் காண முடியவில்லை. எனினும், பொதுமக்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஹவாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் தென்பட்ட கிரகண நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அடுத்த முழு சந்திர கிரகணம் 2025 மார்ச் 14-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், பகுதி சந்திர கிரகணம் 2023 அக்டோபர் 28-ம் தேதி நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.