வட இந்தியாவிற்கு இன்று (நவம்பர் 9) காலை மிகவும் பதற்றமான பொழுதாக விடிந்திருக்கிறது. அதற்கு காரணம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு. இது மிகவும் லேசாகத் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் அச்சத்துடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
வெறும் 10 வினாடிகளே நில அதிர்வு உணரப்பட்டாலும், அதன்பிறகு தூக்கமே போச்சு என திக் திக் இரவாக தொடர்ந்துள்ளது. இந்த இரவு நல்ல இரவாக முடியட்டும் என்று பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்விற்கு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கமே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Breaking: ‘டெல்லியில்’…உணரப்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!
இதனை தேசிய நிலநடுக்க ஆய்வு மையமும் (NCS) உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி நேபாளத்தில் மூன்று முறை வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. NCS வெளியிட்ட தகவலின்படி,
நேற்று இரவு 8.52 மணிக்கு நேபாளத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நேற்று இரவு 11.57 மணிக்கு மிசோரம் மாநிலம் சாம்பையில் (Champhai) இருந்து தெற்கு தென்கிழக்கில் 41 கிலோமீட்டர் தூரத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது.நள்ளிரவு 1.57 மணிக்கு நேபாளத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நள்ளிரவு 2.06 மணிக்கு மிசோரம் மாநிலம் கோபாவில் (Ngopa) இருந்து வடகிழக்கே 36 கிலோமீட்டர் தூரத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 51 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது.அதிகாலை 4.37 மணிக்கு நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கிலோமீட்டர் தூரத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாகவே தலைநகர் டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. மேலும் லக்னோவிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் நில அதிர்வு… நள்ளிரவில் ஓடிவந்த மக்கள்… நடந்தது இதுதான்- அலறிய ட்விட்டர்!
இதில் நேபாளத்தில் நள்ளிரவு 1.57 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமே பெரியது. ஏனெனில் இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 6 பேர் பலியாகியிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.