பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்க அவசர சட்டம்: கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானை பல்கலைக் கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் பனிப்போர்  நிலவி வருகிறது.  பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்  பதவிகளில் அரசு நியமிப்பவர்களுக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதற்கு காரணம்.

இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் இதுவரை ஆரிப் கையெழுத்து போடவில்லை. இந்நிலையில், கவர்னர் ஆரிப்பை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர கேரள அரசு தீர்மானித்துள்ளது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வேந்தர் பதவியில் கவர்னருக்கு பதிலாக அமைச்சர்களையோ அல்லது நிபுணர்களையோ நியமிக்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

 இது தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடரை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனது கட்சிக்காரர்களை துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளில் நியமிப்பதற்காகத்தான் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது என்று காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.