லண்டன், சக எம்.பி.,யை துன்புறுத்தும் வகையில், ‘மொபைல் போனில்’ செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரிட்டன் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இது, புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த சில மாதங்களில் மூன்று பிரதமர்கள் மாறியுள்ளனர். போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் விலகலைத் தொடர்ந்து, ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், சமீபத்தில் பிரதமராக பதவியேற்றார்.
பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், எந்த துறைகளும் ஒதுக்கப்படாத இணையமைச்சர் காவின் வில்லியம்சன், சக எம்.பி., ஒருவரை துன்புறுத்தும் வகையில், மொபைல் போனில் செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, சில மூத்த அதிகாரிகளும் அவருக்கு எதிராக புகார்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக காவின் வில்லியம்சன் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
இந்தப் பிரச்னை தொடர்பான விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க போதிய ஒத்துழைப்பு அளிப்பேன்.
என்னால் இந்த அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலேயே, பதவியை ராஜினாமா செய்கிறேன்.
விசாரணையில் என் மீது குற்றம் ஏதுமில்லை என்பதை நிரூபிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சில பிரச்னைகளால் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர் காவின் வில்லியம்சன். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சை எழுந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement