‛லவ் டுடே' படத்திற்கு கிடைத்த ஆதரவு : பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து தற்போது லவ் டுடே என்ற படத்தை தானே இயக்கி, நடித்திருக்கிறார். நவம்பர் 4ஆம் தேதி வெளியான இந்த படம் இதுவரை 20 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு தியேட்டர்களும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து அவர் நெகிழ்ச்சி உடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அதில், இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும் காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும் நள்ளிரவு காட்சிகளும் தியேட்டர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை ஆனாலும் பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்புல் ஆவதையும் குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன்.

தமிழ்நாட்டிற்கு வெளியில் பெங்களூர், கேரளா, மலேசியா போன்ற இடங்களிலும் இதே நிலையில் இருக்கிறது. நான் நட்சத்திரமில்லை. உங்களில் ஒருவன். நீங்கள் என் மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக என்னை கை தூக்கி விட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சிரிப்பதையும் கொண்டாடுவதையும் தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.

உங்கள் முகத்தில் விழும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது. தியேட்டர்களில் சத்தமும் மகிழ்ச்சியான முகங்களும் நன்றி. நீங்கள் என்னை நேசிப்பதையும் என் மீது அக்கறை கொள்வதையும் ஆதரவு அளிப்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும் மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.