“2024-ல் மோடிக்கு சவால் விடக்கூடிய சக்தி ராகுலுக்கு இருக்கிறது, ஆனாலும்..!" – கெலாட் கூறுவதென்ன?

இமாச்சலப் பிரதேசம், குஜராத் என அடுத்தடுத்து மாநில தேர்தல்கள் நடக்கவிருக்கும் வேளையில், பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள், 2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை குறிவைத்துவருகின்றன. அதற்கான வேலையைத் தொடங்கிவிட்ட காங்கிரஸ், கட்சிக்கு புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை தேர்வுசெய்தது. அதேவேளையில், மக்களவைத் தேர்தலுக்குள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டுமக்களை நேரில் சந்திக்க `பாரத் ஜோடோ’ எனும் பெயரில் நடைப்பயண யாத்திரையையும் ராகுல் காந்தி மேற்கொண்டுவருகிறார்.

அசோக் கெலாட்

ஆனாலும், காங்கிரஸில் யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்பது பற்றி எந்தவொரு தகவலும் இதுவரை கட்சியிலிருந்து வெளிப்படவில்லை. இதற்கிடையில், பி.ஆர்.எஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 2024-ல் யார் மோடியை எதிர்க்கப்போகிறார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்த அசோக் கெலாட், “பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் முடிவுக்கு வர வேண்டும், நாட்டில் சகோதரத்துவம் நிலவ வேண்டும். இதுதான் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம். அவரின் செய்தி அனைவரிடமும் சென்றடைகிறது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி

அதே சமயம், குஜராத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உள்ளது. அவர் அங்கு போகலாம் அல்லது அது நிகழாமலும் போகலாம். ஆனால் அவர் பேசுவது மக்களின் பிரச்னைகள். 2024-ல் பிரதமர் மோடிக்குச் சவால் விடக்கூடிய சக்தி அவரிடம் உள்ளது. மேலும் இது ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. ஆனால், சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அவரின் மதிப்பு கெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மக்களை இப்போது அதைப் புரிந்துகொண்டார்கள்” என்று கூறினார்.

மேலும் 2024-ல் எதிர்க்கட்சிகளின் முகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அனைத்து அரசியல் கட்சிகளும் அதனை முடிவு செய்யும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கவே நாடு விரும்புகிறது” என அசோக் கெலாட் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.