ஜம்முவில் பஸ்கள் மோதல் 3 பேர் பலி; 17 பேர் காயம்

சம்பா: ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் 2 பஸ்கள் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் அதிவேகமாக ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் சிலர், லேசான தூக்கத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் முன்னால் சென்ற ஒரு பஸ்சை முந்த முயன்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் அலறி கூச்சலிட்டனர்.

அவ்வழியாக சென்றவர்கள் ஓடி வந்து, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும், மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 13 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 17 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.