தமிழ்நாட்டில் குறைந்தது மின் கட்டணம்… முழு விவரம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

முன்னதாக, தமிழ்நாடு அரசு அண்மையில் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்தை அதிகரித்தது. அந்தக் கட்டண உயர்வானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்த மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்ற தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.