“திமுக-வை விட மொழி மீது பற்றுள்ளவர்கள் பாஜக-வினர்” – சொல்கிறார் எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த போது பேச்சு, பேட்டி, அறிக்கை என பரபரப்பாக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரான பிறகு தமிழக அரசியலில் சைலன்ட் மோடானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்காணல் சம்பந்தமாக அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்…

“மத்திய இணை அமைச்சராக டெல்லி வாழ்க்கை எப்படி போகிறது…?”

“இந்தியாவை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பிரதமரின் கனவு, லட்சிய பாதையில் பயணிக்க எனக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். 2047-ம் ஆண்டு நம் நாட்டின் நூறாமாண்டு சுதந்திர தினத்தின்போது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பு வலுவாக்க வேண்டும். உலக நாடுகளுக்கு வழிக்காட்டும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக இப்போதிலிருந்தே ஒரு தொலை நோக்கு பார்வையில் செயல்திட்டம் தீட்டி வரும் பிரதமரின் அமைச்சரவையில் தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பது சந்தோஷமாக பார்க்கிறேன். நான் இணை அமைச்சராக இருக்கும் மீன்வளத்துறையில், 2019-ல் தான் மீனவர்களுக்கு என்று தனி நல அமைச்சகமே கொண்டு வரப்படுகிறது.  இந்த துறையில் 2014 வரையில் வெறும் மூவாயிரம் கோடிதான் முதலீடு போடப்பட்டிருக்கிறது. ஆனால் பா.ஜ.க ஆட்சி வந்த  எட்டு ஆண்டுகளில் 32,500 கோடி மூதலீடு செய்து வரலாற்றில் முதன் முறையாக அந்த துறையை மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் மீன் வளத்துறை சிறந்த பங்காற்றி வருகிறது”

அண்ணாமலை

“மீன்வளத் துறையில் இணை அமைச்சராக நீங்கள் பொறுப்பு வகிக்கும் போதே தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்களே?”

“மீனவர்களை பொறுத்தவரை தமிழ் மீனவர்கள், குஜராத் மீனவர்கள், தெலுங்கு மீனவர்கள் என்று பிரித்து பார்ப்பதில்லை. அனைவரும் இந்திய மீனவர்கள்தான். தாக்குதல் நடத்தியதை கடற்படையும் ஒப்பு கொண்டு இருக்கிறார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இங்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணியினர் ‘இந்தி பேசாததால்தான் சுட்டார்கள்…’ என்று சொல்வதெல்லாம் அரசியலுக்காக சொல்லப்படும் அப்பட்டமான பொய்”

“பா.ஜ.க-வினர் அழைக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கும் விமர்சனங்கள் எழுந்து வருகிறதே?”

“காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டு கலாசார உறவு இருக்கிறது. அதை புதுபிக்கும், பலப்படுத்தும்  விதமாக கிட்டத்தட்ட 2500 பேர் அங்கு செல்ல இருக்கிறார்கள். அதை ஏற்க மனம் இல்லாதவர்கள் ஏதாவது பேசி கொண்டிருப்பார்கள். இப்போது காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு முன்பதிவு செய்து வருகிறார்கள். கார்த்திகை ஒன்றாம் தேதி ஆரம்பித்து அந்த மாதம் முழுவதும், முழுமையான தமிழ் கலாசாரம் வாரணாசியில் பிரதிபலிக்கும். அதில் தினமும் தமிழ் கலாசார நிகழ்ச்சிகள், தமிழரின் தனி அடையாளங்கள் காட்சி பொருட்களாக வைக்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரியம் இந்தியா முழுவதும் பிரதிபலிக்க வேண்டும் என்பது பிரதமரின் யோசனை. அதுவும் பிரதமரின் தொகுதியில் என்பது கூடுதல் சிறப்பு”

“தமிழ், தமிழர் நலன் என்பதெல்லாம் பா.ஜ.க-வின் நாடகம் என்று வாதங்கள் வைக்கப்படுகிறதே?”

“பா.ஜ.க-மீது ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக பேசுவது இதெல்லாம். அதில் எதை பேசினால் சரியாக இருக்கும் என்பதை பார்த்து, மொழியை பற்றி சொன்னால் சென்டிமென்டா இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், தி.மு.க-வை விட மொழி மீது பற்றுள்ளவர்கள் பா.ஜ.க-வினர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதுவும் பிரதமர் போல் தமிழுக்கு உலகம் முழுவதும் ஓர் அங்கிகாரத்தை கொடுப்பது யார்?”

இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

“ஆனால், அப்படி இருந்தும் ஒரு பக்கம் பா.ஜ.க ‘இந்தி திணிக்கிறது’ என்கிற குற்றச்சாட்டும் இருக்கத்தானே செய்கிறது?”

“இதை ஒரு கேலி கூத்தாகத்தான் பார்க்கிறேன். தி.மு.க இந்தி திணிப்பு என்று போலி அரங்கேற்றத்தை நடத்தி கொண்டிருக்கிறது. 1967-ல் இந்தியை வைத்து ஆட்சிக்கு வந்தார்கள். அன்றைக்கு இருந்த காலம் வேறு. இன்னும் சொல்ல போனால் தி.மு.க-வை விட மொழி மீது பற்றுள்ளவர்கள் பா.ஜ.க-வினர். அதனால்தான் பிரதமர் மோடி தமிழுக்கு உலகம் முழுவதும் ஓர் அங்கிகாரத்தை கொடுத்து வருகிறார். நான் தாய்மொழி தமிழுக்கு ஆதாரவான ஆள். ஆனால், பிற மொழிகளையும் மதித்து அனைத்து மொழியையும் சமமாக பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.

சி.பி.எஸ்.சி, மெட்ரிகுலேசன் என தி.மு.க-வினர் நடத்தும் அத்தனை பள்ளிகளிலும் இந்தி இருக்கிறது. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள என்னை போல் அரசு பள்ளிகளில் படித்து வந்த ஏழை குழந்தைகளுக்கு இந்தி மறுக்கப்படுகிறது. அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட பல இளைஞர்கள் தமிழ்நாட்டை தாண்டி வெளியே போகும் போது மொழி பிரச்னையால் முடங்கி போய் இருக்கிறோம் என்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் யார் மீதும் எந்த மொழியும் திணித்துவிட முடியாது. இந்தி திணிப்பு எனும் ஒரு போலி வேடத்தை, மக்களை ஏமாற்றும் விதமாக பா.ஜ.க மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன் வைக்கிறது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்”

மோடி, ஸ்டாலின்

“’திராவிட மாடல்’ ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?”

“திராவிட மாடல் என்பதே கிடையாது. தமிழ்நாடு ஆன்மிக மாடல், ஆன்மிக பூமி, தெய்வீக பூமி. இன்றைக்கு இந்த ஆட்சி இருக்கிறது என்றால் நாளைக்கு வரலாறு பேச வேண்டும். அப்படி ஸ்டாலின் என்ன வரலாறை விட்டு செல்வார். ஏனென்றால் சொல்லிக் கொள்ளும்படி ஒரு திட்டங்களும் செயல்படுத்த்தாமல் இருக்கிறார்கள். இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பதை ஒவ்வொரு இடங்களிலும் நானும் பேசி வருகிறேன். போகிற இடங்களில் எல்லாம் தாய்மார்களும் கேட்கிறார்கள். ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கு ஓர் எடுத்துக்காடு. இதனையடுத்து தமிழ்நாட்டு இளைஞர்களின் அடுத்த கட்டத்திற்கு என்ன வழி என்று அரசு யோசிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் படித்த இளைஞர்களது மனித வளத்தை சரியாக பயன்படுத்தவில்லை. படித்துவிட்டு வருபவர்கள் பணியில் இருக்கிறார்களா என்பதும் மிகப்பெரிய கேள்வி.

தொழிற்சாலைகளின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த கல்வி இவர்களிடத்தில் இருக்கிறதா என்றால், அடிப்படைக்கல்வி இருக்கிறது. ஆனால், இரண்டுக்கும் நடுவிலான இடைவெளி இருக்கிறது. பல இடங்களில் புதிய தொழிநுட்பம் வந்துவிட்டது. அவர்களின் தேவை வேறு மாதிரி இருக்கிறது. அந்த தேவைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில், அந்த தொழிற்சாலை தேவைகளுக்கு ஏற்ப தங்களுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதோடு, அந்த இடைவெளியைப் போக்க திறன் மேம்பாடு கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சரிசெய்து வரலாற்றை பதிவு செய்வதற்கான வேலைகளை ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.