பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருமானம் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவிக்கையில், ‘மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட செலவினங்களை குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.