திருநந்திக்கரை- மூலைப்பாகம் வழியாக செல்லும் கால்வாய் கரை இடிந்துவிழும் அபாயம்

குலசேகரம்: பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கோதையாறு இடதுகரை கால்வாய் வழியாக திருநந்திக்கரை பகுதிக்கு செல்கிறது. ஆனால் சமீபத்தில் பெய்து  வரும் கனமழை காரணமாக திருநந்திக்கரை பாலத்தில் இருந்து சானல்கரை சாலை வழியாக மூலைப்பாகம்  பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் செல்லும் கோதையாறு இடதுகரை கால்வாயின் கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையின் மறுபகுதியில் பக்கச்சுவர் எதுவும் இல்லாததால் சாலையின் ஓரப்பகுதி அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவில் செல்கிறது. ஆனால் பருவமழைக்காலம் முடிந்த பிறகு பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும்போது, இந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது சாலை அரிக்கப்பட்டு கால்வாய் கரை முழுவதும் இடிந்துவிழும் அபாயம் ஏற்படும். எனவே இந்த கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை விரைவில் சரி செய்யவேண்டும் என திற்பரப்பு பேரூராட்சி துணைத்தலைவர் ஸ்டாலின் ராஜ் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.