ஆளுநரை அடக்க கம்யூனிஸ்ட் எடுக்கும் அடுத்த அஸ்திரம்!

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றன. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது தமிழக ஆளுநர் விவகாரம் குறித்து அவர் கூறும்போது, ” தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், பாஜக நிர்வாகி போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துக் கொண்டு, போகும் இடமெல்லாம் சனாதனம் குறித்து பேசி வருகிறார்.

அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, திமுக கூட்டணிக் கட்சிகள் கடந்த மாதம் கூட்டறிக்கை வெளியிட்டன.

அத்துடன், இவரை திரும்பப் பெற மத்திய அரசை அறிவுறுத்த கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் மனுவும் அண்மையில் அளித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில, வரும் டிசம்பர் 29 ஆம் தேதி இந்த போராட்டம் நடைபெறும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.