ஆம் ஆத்மி வேட்பாளரை 'அபேஸ்' செய்த பாஜக? – துப்பாக்கி முனையில் வேட்புமனு வாபஸ்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை ஆளும் பாஜகவினர், கடத்தி, துப்பாக்கி முனையில் வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது. இதனால் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை ஆளும் பாஜகவினர், கடத்தி, துப்பாக்கி முனையில் வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. அவரின் வேட்புமனுவை நிராகரிக்க பாஜகவினர் முயற்சி செய்தனர். ஆனால் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்ட்டது. இதனால் வேட்புமனுவை வாபஸ் பெறும்படி அவருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்” என குற்றம் சாட்டி உள்ளார்.

தொடர்ந்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், “நேற்று முதல் கஞ்சனையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை. வேட்புமனுவை பரிசீலனை செய்ய சென்றிருந்தார். வேட்புமனுவை பரிசீலனை செய்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மறுகணமே பா.ஜ.,வின் குண்டர்கள் அவரை கடத்திச் சென்றனர். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இது ஆபத்தானது. இது வேட்பாளரை மட்டுமல்ல ஜனநாயகத்தை கடத்துவது” என தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே, பாஜகவினர் கடத்திச் சென்றதாக கூறப்பட்ட கஞ்சன் ஜரிவாலா, நேற்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் சூரத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் சென்று வேட்புமனுவை வாபஸ் பெற்று சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.