“ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல..!" – லோக் ஆயுக்தா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் தொடர்ச்சியாக அசாதாரணசூழல் நிலவிவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் மோதல்போக்கு தொடர்கிறது. முக்கியமாகத் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, `ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல’ என்று தெரிவித்திருக்கிறார். லோக் ஆயுக்தா தினத்தையொட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.என்.ரவி, “ஆளுநர் என்ன செய்யவேண்டும். என்ன செய்யக்கூடாது என்று அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கப்படுகின்றன. அந்த ஒலிகள் முக்கியமில்லை. முக்கியமானது எதுவென்றால், அது இந்திய அரசியலமைப்பு. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அரசியலமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள். ஆளுநரின் நடவடிக்கைகள் சரியானதா… இல்லையா… என்பதை நீதித்துறை முடிவு செய்யும். ஆளுநர் பதவி அமைப்புமுறை முக்கியமானது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை வலுவிழக்கச்செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொண்டு வரப்படும்போது பங்காற்றுவதற்கு ஆளுநர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. ஆளுநர்கள் அதில் முடிவெடுக்கவேண்டும். ஏனென்றால் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல. அரசியலமைப்பு விதி 200-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மசோதாவைத் தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். அது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.