கதுவா சிறுமி பலாத்காரம் குற்றவாளி சிறுவன் அல்ல: மீண்டும் விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: கதுவா சிறுமி கும்பல் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் இல்லை என்றும் வயது வந்தவராக கருதி விசாரிக்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள கதுவாவில் 2018ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுபாம் சங்ரா சிறுவன் என்பதால் தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கதுவா நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டன. இதை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பரித்வாலா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வேறு உறுதியான சான்றுகள் இல்லாததால், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை சிறுவனாக கருத முடியாது. இப்போது, அவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக கருதி, மீண்டும் விசாரிக்கலாம்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.