பத்தனம்திட்டா: உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக இன்று (16.11.22) மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடைதிறப்பை முன்னிட்டு 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். “வெர்ச்சுவல் கியூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா க்ஷேத்ர நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றுகிறார். அதன் பிறகு, உபதெய்வ கோவில்களில் தீபங்கள் ஏற்றப்படும். பின் மேல்சாந்தி 18ம் படி முன் உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற, பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் வெர்ச்சுவல் க்யூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி துவங்கும். தொடக்க நாளில் சிறப்பு பூஜைகள் இருக்காது. சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழா 16ம் தேதியான நேற்று மாலை நடந்தது.
விருச்சிக ராசிக்கு முதல் நாளான நவம்பர் 17ம் தேதியான இன்று முதல் சபரிமலை மற்றும் மாளிகைப் புறம் ஆகிய இரு கோவில்களையும் புதிய மேல்சாந்திகள் திறப்பார். மண்டல திருவிழா காலம் நவம்பர் 17 இன்றுமுதல் டிசம்பர் 27 வரை நடக்கும். டிசம்பர் 27ல் மண்டல பூஜை நடந்து முடிந்ததும் நடை அடைக்கப்படும்.
தொடர்ந்து மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை கோவில் நடை டிசம்பர் 30ம் தேதி மீண்டும் திறக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும். ஜனவரி 20ம் தேதி முதல் விளக்கு பூஜைகாலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வழக்கமாக கார்த்திகை மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள், மாலை போட்டு விரதம் இருந்து, ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்வது வழக்கம் ஆகும்.