ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தது இந்தோனேசியா!

ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ளது.

இதனிடையே, தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட ஜி20 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி20 மாநாட்டிற்கிடையே, பல்வேறு நாட்டு பிரதமர்கள், அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 மாநாடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் முறைப்படி இந்தோனேசியா ஒப்படைத்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு ஜி20 தலைவராக இந்தியா பதவி வகிக்கவுள்ளது. அதன்பிறகு, இந்த தலைமையை இந்தியா பிரேசிலிடம் ஒப்படைக்கவுள்ளது.

முன்னதாக, ஜி20 தலைமைக்கான இலச்சினை (லோகோ), கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். தாமரை மலர் மீது பூமிப்பந்து இருப்பது போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த லோகோவை வெளியிட்டு பிரதமர் மோடி பேசுகையில், “ஜி20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு.”என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.