தேர்தல் கூட்டணி: டிடிவி தினகரனுக்கு நோ சொன்ன எடப்பாடி!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய நான்கு பேரும் அதிமுகவை ஆளுக்கொரு பக்கமாக பிரித்து பங்கு போட்டுக் கொண்டுள்ளனர். தர்மயுத்த காலத்தில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்றிருந்த நிலை மாறி, இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைக்கப்பட்டன. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர். இதையடுத்து, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவராகம் வெடித்த பிறகு, இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோரும் தனித்தனியாக களமாடி வருகின்றனர். சசிகலாவும் அதிமுகவுக்கு உரிமை கோரி வருகிறார்.

இதில் டிடிவி தினகரன் மட்டும் அமமுக என்ற தனி கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனாலும், அதிமுகவை கைப்பற்றுவதே இலக்கு என தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அதிமுகவை மீட்டெடுப்போம் எனவும் கூறி வருகிறார். கட்சியின் எதிர்காலத்தையும், தேர்தல் அரசியலையும் கருத்தில் கொண்டு, இவர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. டெல்லி பாஜக மேலிடமும் அதனைத்தான் விரும்புவதாக கூறப்படுகிறது.

இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைப்புக்கு தயாராக இருக்கும் மனநிலையை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால்,

மட்டும் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தனது தலைமையின் கீழ்தான் அதிமுக இயங்க வேண்டும் எனவும் விடாப்படியாக இருக்கிறார்.

அந்த வகையில், திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற டிடிவி தினகரன், 2019 மக்களவைத் தேர்தலில் 5.46 சதவீத வாக்குகளை பெற்றார். உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை அவரது அமமுக பதிவு செய்தது. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை அமமுக சந்தித்தது. வெறும் 2.36 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றது. டிடிவி தினகரனும் தோல்வியடைந்தார். அவரது கட்சியில் இருந்த முக்கியத் தலைவர்கள் அதிமுக, திமுகவில் ஐக்கியமாகி விட்டனர். இனியும் தனித்து களமாடினால் சரிவராது என கணித்ததாலேயே அதிமுக கூட்டணியில் இணையத் தயார் என அவர் பகிரங்கமாக அறிவித்ததாக விவாதங்கள் எழுந்துள்ளன.

எதிர்வரவுள்ள 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால், அதிமுக நான்காக பிரிந்து கிடப்பதை பாஜக விரும்பவில்லை. இந்த முறை தமிழகத்தில் கனிசமான தொகுதிகளை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் திட்டத்துக்கு, அதிமுக பிரிந்து கிடப்பது கைகொடுக்காது. எனவே, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை இணைத்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. அதன்படி, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படிதான், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்த்த டிடிவி தினகரன், அதிமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைக்க தயார் என அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை காரணமாக கடந்த 11,12 தேதிகளில் தொடார்ந்து பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சீர்காழியில் வரலாறு காணாத வகையில் சுமார் 112 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலே அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

அதன்பிறகு மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி. அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது.’ என்றார். அதிமுக தலைமையான கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இதுபோன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.